Tuesday, January 17, 2012

கிழக்கு நோக்கி வீசுது கெட்டக் காத்து..!

பிறந்திருக்கிற ஆங்கிலப் புத்தாண்டு எல்லோருக்கும் நல்ல படியா அமையட்டும்..
தைமகளும் உயர்வுக்குக் கைகொடுக்க வாழ்த்துக்கள் …

சுமார் அரையாண்டுக்கு மேல அசந்து தூங்கின எம்மை அடிக்கடி எழுப்பிக்கிட்டே இருந்துச்சு நிறைய மின்னஞ்சல்கள். நடக்கிறது நடக்கட்டும்னு நாம பாட்டுக்குக் கிடந்தாலும், உசுப்பேத்தி உசுப்பேத்தியே நம்ம உறக்கத்தைக் கலைச்சுட்டாங்க..
,
மொழி மறந்து போகாம இருக்க மருந்து கொடுக்குறாப் போல இடைவெளி இல்லாம எல்லாப் பக்கமும் நிறைய நிகழ்வுகள் நடந்துக்கிட்டுதான் இருக்கு.

நம்மோட மொழிப் புழக்கம் குறைஞ்சுடக் கூடாதுன்னு முயற்சி எடுக்கிற அமைப்புகளின் கலைநிகழ்ச்சிகள் களை கட்டும் போதே ஊடாக “களைநிகழ்ச்சிகளும்” கலந்துடறதைக் கண்டாதான் கவலையா இருக்கு..

சுருண்டு கிடந்தவன் சுகமாயிட்டு வரும்போது ஸ்லோ பாய்சனைக் கொடுத்த மாதிரி, இடையிடையே இடி விழுந்தாப் போல நடக்கிற இந்தக் கூத்துக்களைப் பார்க்கும் போது கலவரப் படாம இருக்க முடியல.

ஒண்ணுத்துக்கும் உதவாதவங்களெல்லாம் சுயசரிதை எழுதி உயர்ந்தவங்கன்னு சொல்லிக்கிட்டு உலா வந்த காலம் போய் இப்போ மத்தவங்களை விட்டு தன்னைப் புகழச் சொல்லி அதைப் புத்தகங்களா எழுத வச்சு புளங்காங்கிதம் அடையிறது ஃபேஷனாயிடுச்சு. காகிதம் மலிவா கிடைக்கிறதும்,. அச்சிடுற செலவு அதளபாதாளத்துக்கு போனதும் காரணமாயிருக்குமோ.

இருக்கிற பதக்கத்தையெல்லாம் எடுத்துக் குத்திக்கிட்ட இடிஅமீன் மாதிரி தன்னை விளம்பரப் படுத்திக்க விலையா தன் தலையையேக் கூடக் கொடுப்பாங்க போலருக்கு இந்த தனவான்கள்..

ராத்திரியில ராசா வேசம் கட்டி ஆடுறவன் விடிஞ்சும் தன்னை ராசாவாவே நினைச்சிக்கிட்டும், ராசான்னு சொல்லிகிட்டும் திரிஞ்சா என்னாகும்? அவனுக்கு கூத்தாடிங்கிற பேர் கூட மிஞ்சாது.


தன் மொழியைக் கூட முன்னிறுத்தாத திருக்குறள்தான் இன்னும் முதுமையடையாம வாழ்ந்துக்கிட்டு இருக்கு. சொல்வளத்திலும், கருத்துச்செறிவிலும் ஒப்பற்றப் பழம்பாக்களை இயற்றிய பலரோட பேர் கூட தெரியாது நமக்கு. படைப்புகளின் வாழ்நாளைக் காலம் தீர்மானிக்கட்டும், படைப்பாளி என் பெயர் எதற்குன்னு அவர்கள் தன் பெயரை பதிந்து வைக்காமல் கூட இருந்திருக்கலாம்.

அந்தக் காலத்துல வரின்னு உழைச்சவன்கிட்ட பிடுங்கி வாரிக் கொடுத்தாங்க துதி பாடினவங்களுக்கு. அல்லக்கைகளை புகழச் சொல்லி புல்லரிச்சுப் பொரை வீசுறாங்க இப்பவும். அந்தக் கெட்ட காத்து இப்போ கிழக்கு பக்கமா வீச ஆரம்பிச்சுடுச்சோன்னு கொஞ்சம் கலக்கமா இருக்கு.

அடுத்து ஒரு திடீர் தொற்றுநோய் விவகாரம்..
அப்பப்போ சில தொற்றுநோய்கள் தொல்லை கொடுத்துட்டு (சிலது உயிரை வாங்கிடும்) நீர்க்குமிழியா காணாமப் போயிடும். கண்வலி, காலரா, அம்மைநோய், சமீபத்திய சார்ஸ் வரைக்கும் சொல்லலாம்.

அப்படித்தான் ”ஒய் திஸ் கொலவெறி”ன்னு ஒண்ணு இப்போ உலவிக்கிட்டு இருக்கு. அதை எழுதி(!) பாடின அரைவேக்காட்டுக்குக் கண்டனமா யாழ்ப்பாணத் தமிழர் ஒரு பாடலை வெளியிட்டிருக்கார்.


அவருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களும் ஆதரவையும் தெரிவிக்கிறது நம்ம கடமை. ஆனா அந்தப் பாட்டை(!?) அதைப் பாடினவர்தான் எழுதியிருப்பாருன்னு நம்ப முடியல. கீழே இருக்குற வலைப்பூவைப் படித்தால் இந்த மாதிரியானவங்களோட அறிவு முதிர்ச்சி உங்களுக்கே புரியும்.

http://adikkadi.blogspot.com/2009/08/blog-post.html

(விதிவிலக்காக தானாக சிந்திக்கக் கூடியவர்களும் சிலர் இருப்பது ஆறுதல்)

காலம்காலமாக இது போன்றக் கழிவுகள் தமிழோடுக் கலக்கும் போதெல்லாம் காலம் நிலமாயிருந்து வடிகட்டியிருக்கிறது. வெயிலாய் மாறி மேலெடுத்து மீட்டிருக்கிறது..

நம்மை காலைல எழுப்பி விட அலாரம் கடிகாரமும், டிஜிடல் நவீனங்களும் வந்துட்டாலும், இன்னும் சேவல் கூவுறதை நிறுத்தவேயில்லை. அதுபோல நாம கூவுறதைக் கூவி வைப்போம். எழுறவங்க எழட்டும்..!
இளைத்துக் கொண்டே வரும் நம்ம மொழி எழுந்து நிக்கணும்னு சிரத்தையோட செய்யும் முயற்சிகளுக்கு மட்டுமே என்னைக்கும் துணையாக நிற்போம்.

Wednesday, June 1, 2011

தமிழ்க்கவிதை..!

எல்லோருக்கும் வணக்கமுங்கோ..

சில மாதங்கள் இடைவெளி விட்டு திரும்ப சந்திக்கிறோம்...
அதுக்குள்ள சுனாமி, ஊழல்கள், தேர்தல்கள், கைதுகள்ன்னு
பல களேபரங்கள் நடந்து போச்சு.. போகட்டும்..
சமீபத்துல நாம சந்திச்ச இளைஞர்கள்கிட்ட ”கவிதைகள் பிடிக்குமா?”ன்னு கேட்டோம்.
கொதிச்சு கொந்தளிச்சுட்டாங்க.. ஊடகங்கள் தொடங்கி உதவாத நூல்கள்
வரை பாடா படுத்துதாம் .. அடக் கொடுமையே..!
( ஆனால் புரிகின்ற, தரமானக் கவிதைகள் பிடிக்குமாம்.. )

அவங்களோட கொதிப்பைச் சுருக்கி, தொகுத்து தந்திருக்கோம்... படிங்க...

தமிழ்க்கவிதை..!!!


தமிழ்க் கவிதை..
அது தாலாட்டும் உன் மனதை..!
இந்தா பிடி..
இந்த நூல்களைப் படி..
இது முன்னேற்றும் படி..!

என்ற நண்பர்களின் பேச்சை
நம்பி நான் படிச்சேன்..

ஆதிகால‌த்து புளிச்ச‌ மாவோ..,
ஆத்து ம‌ண‌லோ, ம‌ண்ணோ, த‌விடோ..
அச்சில் ஊத்தி வ‌டிவா எடுத்து
கொட்டி வச்சிருந்தாங்க
குப்பையைப் போல‌..
ப‌டிக்க‌வே த‌ய‌க்க‌மா இருந்துச்சு ..
ப‌டிச்ச‌பின் ம‌ய‌க்க‌மா வந்துடுச்சு ..

மத்த புத்தகமாவது நல்லா இருக்காதான்னு
மளமளன்னு படிச்சு தொலைச்சேன்..!

க‌டிக்குது செருப்புன்னு
க‌ழ‌ட்டி எறிஞ்சுபுட்டு
கொதிக்கிற‌ தார்ரோட்டில் ந‌ட‌ந்து
குதிகால் கொப்புளிச்ச‌ க‌தையாகிப் போச்சு..

தட்டச்சு தெரிஞ்ச
தகுதி ஒண்ணை வச்சிக்கிட்டு,
விளங்காம எழுதுற
வித்தையையும் கத்துக்கிட்டு,
பேரழிவு ஆயுதம் போல்
பின்நவீனம், அதிநவீனமுன்னு
பீதியைக் கிளப்பிட்டாய்ங்க…

எத்தனைமுறைப் படிச்சாலும்
தமிழ் வித்தகர்க்கே விளங்காது..
’பொத்’ன்னு விழுந்துடுவாங்க..
பொறிகலங்கிப் போய்டுவாங்க…

புரியலைன்னு உண்மை சொன்னா
புதுமைக்கு எதிரின்னு
புறந்தள்ளிடுவாங்களோன்னு பயம்..
புரியுதுன்னு எதுக்கும்
பொய்யத்தான் சொல்லிடுவோமா?

வேணாம்..
நடக்கிறது நடக்கட்டும்னு
பொறுக்க முடியாம...
"இந்த எழுத்துக்கு அர்த்தம்
இருக்கான்னு" கேட்டதுக்கு,
“தோணுறது எது உனக்கோ
அதையே தோதாக வச்சிக்கோ”ன்னு
காதுல பூ சுத்தி விட்டுட்டு
காணாமப் போய்ட்டாய்ங்க….

வலைப்பூ பக்கமாவது
இளைப்பாறலாம்னு போனா - அங்கே
அலப்பறையைக் கிளப்புறாய்ங்க..!
அலறி அடிச்சி ஓடுறோம் ..!!

கவிதைன்னு சொல்லி
இப்படிக் கலவரப் படுத்தினா,
திரும்புற பக்கமெல்லாம்
திகிலைக் கிளப்பினா,
திரும்பி பார்க்காம
மிரண்டுதானே ஓடுவோம்..?

பலாப்பழத்தை உடைச்சு
சுளையில் விதை நீக்கி,
முடிஞ்சா…
பழச்சாறாக்கிக் கொடுத்தா..

எங்களுக்கு மட்டுமில்லை...
எல்லோருக்கும்
மொழி இனிக்கும்..
கவித்தமிழ் செழிக்கும்…!!!
இத்தோட முடிக்கிறேன்
நன்றி வணக்கம்..!!!

Monday, February 14, 2011

நடுநிலையோடு சொல்லலாம்.. நல்ல நூலென்று..!

எல்லோருக்கும் 2011 புத்தாண்டு வணக்கம்...!

நம்மோட முந்தைய பதிவுல சிலக் குறைகளை சுட்டிக் காட்டியிருந்தோம்..

சிந்துனத் துளியை சீக்கிரம் துடைச்சிட்டா நிரந்தரக் கறையாகாதுங்கிற நினைப்புலதான், நிறையப் பேரு சொல்லிட்டுப் போனதையும் சேர்த்துப் பதிவாப் போட்டோம்..

காயட்டுமுன்னு விட்டிருந்தா காக்காக்களெல்லாம் குத்தம் சொல்ல வாய்ப்பாப் போயிருக்கும்..

ஆனா வெள்ளரிப் பழத்தைப் பிளக்க வெடிகுண்டு வீசுன கதையா என்ன சொல்லிருக்கோம்னு புரிஞ்சுக்காமலேக் கண்டன மின்னஞ்சல்கள் கண்டபடிக் கணக்கில்லாமக் குவிஞ்சுடுச்சு..

விருந்து செலவு கால் பணம், வெத்தலை பாக்கு முக்கா பணம்ங்கிற மாதிரி விளம்பரக் குட்டையில நாம வீழ்ந்துடக் கூடாதில்லையா?

அது போகட்டும்..

புலி உறுமல்களுக்கு மத்தியில புறாக் கடிதமா ஒரேயொரு மின்னஞ்சல் வந்துச்சு.

'என் வானம் நான் மேகம்' என்ற புத்தகத்தின் அறிமுக விழா பற்றியக் கட்டுரை, இணையத் தளத்தில் வெளியாகியிருப்பதைப் படிக்கச்சொல்லியது அந்த மின்னஞ்சல்.. ஏதாவது உள்நோக்கமா இருக்குமோங்கிற உதறல் ஒரு ஓரமா இருக்கவே செஞ்சுது…

கொஞ்சம் முயற்சிக்குப் பின் அந்தப் புத்தகம் கிடைச்சு, படிச்சு, முடிச்சவுடனே மகிழ்ச்சியோட இந்தப் பதிவு.

அயல்நாட்டுத் திரைப்படக் கதைகளின் தொகுப்பு.
இணையத் தளக் கட்டுரையிலேயே அப்படி எந்தப் படமும் இல்லையென சொல்லி விட்டதால் எமக்கு சஸ்பென்சும், ஏமாற்றமும் மிஸ்ஸிங்..

பெற்றோரின் முறையற்ற நடத்தையால் பாதிப்புறும் இளம்பெண்ணைப் பற்றிய 'பைனாகுலர்' என்ற முதல் கதை..

குழந்தைகள் மீது பாசத்தைக் கொட்டும் அங்கிள் தாத்தாவையும் அதற்கானக் காரணத்தையும் நெகிழ்ச்சியாகச் சொன்ன 'எர்ஃகு' என்ற இரண்டாவது கதை..

மூன்றாவதுக் கதை தந்தையைத் தேடிச் செல்லும் மகனின் பயணம் வழியாக பல்வேறு தேசங்களை கண்முன் நிறுத்தும் 'தி இண்டியானோஸ்'.

உரிமைப் போராட்டத்தில் ஈடுபடும் காதலனோடு சேரப் போராடும் நெஞ்சுரம் கொண்டப் பெண் பற்றியது 'லிவ் வித் லைவ்' என்ற நான்காவதுக் கதை.

சலவை செய்பவன், சந்தர்ப்ப வசத்தால் தவறு செய்த அவன் மனைவி, வேற்றின ஆடவனை விரும்பும் மகள் என்று பல தளங்களில் பயணிக்கும் 'மில்க் பாத்' என்ற ஐந்தாவதுக் கதை.

அடக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுவோரின் கோபம் நல்ல மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை என்பதைச் சொல்லும் 'லாஜ்' என்ற ஆறாவது கதை.

சுமார் ஒரு வாரக் காலத்தில் படித்து முடித்த பின்னும் மனசை விட்டு அகல மறுக்கிறது. இனம்புரியாத உணர்வு நீடிக்கிறது இன்னும்... இதற்கு மேல் கதையை சொல்லப் போவதில்லை. புத்தகத்தை விலைக் கொடுத்து வாங்கிப் படியுங்கள்..

எழுபது எண்பதுகளில் பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், வைரமுத்து, பாக்யராஜ், ராஜேந்தர் போன்றோரை "இவ்வளவு நாட்கள் எங்கிருந்தார்கள் இவர்கள்?" என்று வியப்போடு எழுதுவார்கள்.. இந்தப் புத்தகத்தைப் படித்தபின் இந்நூலாசிரியரைப் பற்றி அப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது.

நூலாசிரியரின் உழைப்பும், நுட்பமான பார்வையும் ஒவ்வொருக் கதையிலும் தெரிகிறது..

சிறுசிறுக் குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்

நடுநிலையோடு சொல்லலாம் இதை நல்ல நூலென்று..!

எமது முந்தைய 'புத்தகம் போடுற புத்திசாலிகளே' பதிவில் ""நீங்க புத்தகம் வெளியிட்ட பிற்பாடு அதை படிச்சவங்க ”நல்லாயிருக்குன்னு” சொல்லிக் கடையில தேடி வாங்கி படிச்சாங்கன்னா அதுதான் உங்க எழுத்துக்குக் கிடைச்ச வெற்றி""ன்னு சொல்லப்பட்டு இருந்தது.

இந்த 'என் வானம் நான் மேகம்' என்ற புத்தகம் அந்த வகையில வெற்றியடைஞ்சிருக்கு.

இரவல் வாங்கிய புத்தகத்தைத் திரும்பத் தர வேண்டியிருப்பதால் பணம் கொடுத்து வாங்கி எம்மோட தொகுப்பில் வைக்க வேண்டும்... எங்கே கிடைக்குமிந்தப் புத்தகமென்று பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் தெரிவியுங்களேன் ப்ளீஸ்...!!