Wednesday, June 1, 2011

தமிழ்க்கவிதை..!

எல்லோருக்கும் வணக்கமுங்கோ..

சில மாதங்கள் இடைவெளி விட்டு திரும்ப சந்திக்கிறோம்...
அதுக்குள்ள சுனாமி, ஊழல்கள், தேர்தல்கள், கைதுகள்ன்னு
பல களேபரங்கள் நடந்து போச்சு.. போகட்டும்..
சமீபத்துல நாம சந்திச்ச இளைஞர்கள்கிட்ட ”கவிதைகள் பிடிக்குமா?”ன்னு கேட்டோம்.
கொதிச்சு கொந்தளிச்சுட்டாங்க.. ஊடகங்கள் தொடங்கி உதவாத நூல்கள்
வரை பாடா படுத்துதாம் .. அடக் கொடுமையே..!
( ஆனால் புரிகின்ற, தரமானக் கவிதைகள் பிடிக்குமாம்.. )

அவங்களோட கொதிப்பைச் சுருக்கி, தொகுத்து தந்திருக்கோம்... படிங்க...

தமிழ்க்கவிதை..!!!


தமிழ்க் கவிதை..
அது தாலாட்டும் உன் மனதை..!
இந்தா பிடி..
இந்த நூல்களைப் படி..
இது முன்னேற்றும் படி..!

என்ற நண்பர்களின் பேச்சை
நம்பி நான் படிச்சேன்..

ஆதிகால‌த்து புளிச்ச‌ மாவோ..,
ஆத்து ம‌ண‌லோ, ம‌ண்ணோ, த‌விடோ..
அச்சில் ஊத்தி வ‌டிவா எடுத்து
கொட்டி வச்சிருந்தாங்க
குப்பையைப் போல‌..
ப‌டிக்க‌வே த‌ய‌க்க‌மா இருந்துச்சு ..
ப‌டிச்ச‌பின் ம‌ய‌க்க‌மா வந்துடுச்சு ..

மத்த புத்தகமாவது நல்லா இருக்காதான்னு
மளமளன்னு படிச்சு தொலைச்சேன்..!

க‌டிக்குது செருப்புன்னு
க‌ழ‌ட்டி எறிஞ்சுபுட்டு
கொதிக்கிற‌ தார்ரோட்டில் ந‌ட‌ந்து
குதிகால் கொப்புளிச்ச‌ க‌தையாகிப் போச்சு..

தட்டச்சு தெரிஞ்ச
தகுதி ஒண்ணை வச்சிக்கிட்டு,
விளங்காம எழுதுற
வித்தையையும் கத்துக்கிட்டு,
பேரழிவு ஆயுதம் போல்
பின்நவீனம், அதிநவீனமுன்னு
பீதியைக் கிளப்பிட்டாய்ங்க…

எத்தனைமுறைப் படிச்சாலும்
தமிழ் வித்தகர்க்கே விளங்காது..
’பொத்’ன்னு விழுந்துடுவாங்க..
பொறிகலங்கிப் போய்டுவாங்க…

புரியலைன்னு உண்மை சொன்னா
புதுமைக்கு எதிரின்னு
புறந்தள்ளிடுவாங்களோன்னு பயம்..
புரியுதுன்னு எதுக்கும்
பொய்யத்தான் சொல்லிடுவோமா?

வேணாம்..
நடக்கிறது நடக்கட்டும்னு
பொறுக்க முடியாம...
"இந்த எழுத்துக்கு அர்த்தம்
இருக்கான்னு" கேட்டதுக்கு,
“தோணுறது எது உனக்கோ
அதையே தோதாக வச்சிக்கோ”ன்னு
காதுல பூ சுத்தி விட்டுட்டு
காணாமப் போய்ட்டாய்ங்க….

வலைப்பூ பக்கமாவது
இளைப்பாறலாம்னு போனா - அங்கே
அலப்பறையைக் கிளப்புறாய்ங்க..!
அலறி அடிச்சி ஓடுறோம் ..!!

கவிதைன்னு சொல்லி
இப்படிக் கலவரப் படுத்தினா,
திரும்புற பக்கமெல்லாம்
திகிலைக் கிளப்பினா,
திரும்பி பார்க்காம
மிரண்டுதானே ஓடுவோம்..?

பலாப்பழத்தை உடைச்சு
சுளையில் விதை நீக்கி,
முடிஞ்சா…
பழச்சாறாக்கிக் கொடுத்தா..

எங்களுக்கு மட்டுமில்லை...
எல்லோருக்கும்
மொழி இனிக்கும்..
கவித்தமிழ் செழிக்கும்…!!!
இத்தோட முடிக்கிறேன்
நன்றி வணக்கம்..!!!